சினிமா செய்திகள்
வெற்றிமாறன்

அந்த விசயத்தை சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன்.. உண்மையை உடைத்த வெற்றிமாறன்

Published On 2022-03-18 12:37 GMT   |   Update On 2022-03-18 12:37 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் இந்த விசயத்தை சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன் என்று சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஜி.வி பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் இணைந்து நடித்திருக்கும் படம் செல்ஃபி. இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதிமாறன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா மற்றும் வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீட் தேர்வை மையப்படுத்தி எடுப்பட்ட இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோருடன் பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது, ‘மதிமாறன் சுய மரியாதையுடன் இருப்பவன். ஒரு குறும்படம் எடுத்து என்னிடம் வந்தான். அதைப்பார்த்து விட்டு அவனை என்னோடு சேர்த்துக்கொண்டேன். ஒரு நல்ல சினிமாவிற்கான எனர்ஜி அவனிடம் இருந்தது. ஆடுகளம் படம் ஷூட்டிங்கில் மதிமாறன் ஜூனியர். ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் அவன் வேலை ரொம்ப பெரியது. செல்ஃபி படத்தின் படப்பிடிப்பை 29 நாட்களில் முடித்து விட்டான். ஆச்சர்யமாக இருந்தது. இந்தப்படம் மூன்று மடங்கு லாபம் வரும் என்று தாணு சார் சொன்னார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. நான் படம் பார்த்து விட்டேன். படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கிறது. படத்தில் கேமரா எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. 


வெற்றிமாறன் - மதிமாறன்

ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்தில் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்திருக்கிறார். டிரைலரை விட படம் சிறப்பாக இருக்கும். மதிமாறனுக்கு நிறைய பாராட்டுக்கள் வரும், கவனமாக இருக்க வேண்டும். நமது குறைநிறைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தாணு சார் இந்தப்படத்தை எடுத்துச் செய்யணும் என்று நினைத்ததுதான் நல்ல விசயம். தாணு சார் இப்படத்தை சுற்றி ஒரு விசயத்தைக் கொடுத்திடுவார். அவருக்கு ரொம்ப நன்றி. நான் ஒரு விசயத்தை சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். மதிமாறன் எந்த ஒரு இடத்திலும் என் உறவினர் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை. எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தது மதிமாறனின் அப்பா தான். அவர் என் மாமா. படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் பேசினேன். எனக்குப் பிடித்தது என்றேன். நிச்சயமாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.

Tags:    

Similar News