சினிமா
இந்தியன் 2 படத்தின் போஸ்டர்

‘இந்தியன் 2’ விவகாரம்... லைகா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றது ஐகோர்ட்டு

Published On 2021-09-02 09:07 GMT   |   Update On 2021-09-02 09:07 GMT
‘இந்தியன் 2’ பட பிரச்சினை தொடர்பாக லைகா நிறுவனமும், இயக்குனர் ‌ஷங்கரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ‌ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ‌ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.


சென்னை ஐகோர்ட்டு

அப்போது, லைகா தரப்பில் ஆஜரான வக்கீல், லைகா மற்றும் ‌ஷங்கர் தரப்பில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருவதால் பேச்சுவார்த்தை முடித்து முடிவு காண்பதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என்று ‌ஷங்கர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News