சினிமா
வடிவேலு

வடிவேலு விவகாரத்தில் தீர்வு ஏற்பட்டது எப்படி?

Published On 2021-08-29 08:43 GMT   |   Update On 2021-08-29 08:43 GMT
நகைச்சுவை நடிகர் வடிவேலு சுராஜ் இயக்க உள்ள ‘நாய் சேகர்’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார்.
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கி, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஷங்கர் முன்வந்தார். இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

இப்படத்துக்காக அவருக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதற்கு ‘அட்வான்ஸ்’ ஆக ரூ.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து திடீரென்று அந்த படத்தில் இருந்து வடிவேலு நடிக்க மறுத்து விலகினார். இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஷங்கர் புகார் அளித்தார். இதனால் நடிகர் வடிவேலு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. வடிவேலு வாங்கிய ‘அட்வான்ஸ்’ தொகை ரூ.5 கோடியை இயக்குனர் ஷங்கரிடம் திருப்பிக் கொடுக்கும்படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.



வடிவேலு கொடுக்க வேண்டிய ரூ.5 கோடியை, அவரை வைத்து படம் தயாரிக்கும் ஒரு பட நிறுவனம், ஷங்கரிடம் திருப்பி கொடுத்ததால், இந்த பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டு சுமுகமாக முடிந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் வடிவேலு படங்களில் நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News