சினிமா
கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் ராஷ்மிகா
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தானா, கன்னடப் படம் ஒன்றிற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியிருக்கிறார். #RashmikaMandanna
தமிழ், தெலுங்கு திரையுலகை விட குறைவான மார்கெட்டை கொண்டது கன்னட திரையுலகம். நடிகர், நடிகைகளின் சம்பளமும் மற்ற திரையுலகை விட அங்கு குறைவாகவே இருக்கும். 2010-ஆம் ஆண்டு ‘சூப்பர்’ படத்தில் நடித்ததற்காக நயன்தாரா பெற்றதே கன்னடத் திரையுலகில் ஒரு நடிகையின் அதிகபட்ச சம்பளமாக இருந்தது.
அதன்பின் ஏமி ஜாக்சன் ‘தி வில்லன்’ படத்திற்காக பெற்ற தொகை கன்னட நடிகைகளை வியப்பில் ஆழ்த்தியது. தற்போது ராஷ்மிகாவின் மேல் ஒட்டுமொத்த கவனமும் திரும்பியுள்ளது. 2016-ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தானா. முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதும் அடுத்தடுத்து இரு கன்னட படங்களில் நடித்தார். நாக சவுரியா உடன் இணைந்து நடித்த சலோ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தெலுங்கின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படத்திலும் அவர் நடித்த கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளிலும் முக்கியமான படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா தற்போது கன்னடத்தில் ஒப்பந்தமாகியுள்ள படம் ‘பொகரு’.
துருவா சர்ஜா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிப்பதற்காக ராஷ்மிகாவுக்கு 64 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே கன்னடப் படம் ஒன்றிற்காக ஒரு நடிகை பெறும் அதிக பட்ச சம்பளமாகும். ராஷ்மிகா விஜய்-அட்லீ இணையும் படத்தில் நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள். #RashmikaMandanna