சினிமா

ராகவேந்திரா படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது: நடிகர் டெல்லி கணேஷ் பேட்டி

Published On 2016-08-26 10:06 GMT   |   Update On 2016-08-26 10:06 GMT
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரர் திரைப்படத்தில் அப்பண்ணஆச்சாரியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் டெல்லி கணேஷ் கோபி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்காக கோபி வந்துள்ளேன். எனக்கு அறிமுகமான, இயற்கை சூழல் நிறைந்த, பசுமை மிகுந்த ஊர் கோபியாகும்.

இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். நான் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு டெல்லியில் விமானப் படையில் பணியாற்றினேன். அங்கு ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக நான் பல்வேறு நகைச்சுவை நாடகங்களை நடத்தி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளேன்.

நான் முதன் முதலில் மனம் ஒரு குரங்கு என்ற நாடகத்தில் நடித்தேன். பின்னர், டைரக்டர் பாலச்சந்தர் இயக்கிய திரைப்படமான பட்டின பிரவேசத்தில் மூத்த அண்ணன் வேடத்தில் முதன் முதலாக நடித்தேன். அப்போது தான் எனக்கு டைரக்டர் பாலச்சந்தர் டெல்லி கணேஷ் என பெயர் வைத்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரர் திரைப்படத்தில் அப்பண்ணஆச்சாரியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வருங்கால தலைமுறையினர் அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும். கோபம் கொள்ளக்கூடாது. ஒருவருக்கு தீமை செய்யாமல் இருப்பதே பெரிய நன்மை.

இவ்வாறு டெல்லி கணேஷ் கூறினார்.

Similar News