ஆட்டோமொபைல்
2019 ஜீப் ராங்லர்

அதிரடி அம்சங்களுடன் ஜீப் ராங்லர் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-08-10 10:45 GMT   |   Update On 2019-08-10 10:45 GMT
ஜீப் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய 2019 ராங்லர் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



அமெரிக்காவைச் சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் பிரபல மாடலான ராங்லர் மாடலில் நான்காம் தலைமுறை அறிமுகமாகி உள்ளது. தற்போது விற்பனையாகிவரும் ராங்லர் மாடல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாடலாகும். இந்தியாவில் புதிய ஜீப் ராங்லர் விலை ரூ. 63.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐந்து கதவுகளைக் கொண்டதாக கம்பீரமான தோற்றத்துடன் சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது அன்லிமிட்டெட் என அழைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விற்பனையாகும் ஜீப் ராங்லர் சகாரா மாடலின் வடிவமைப்பைக் கொண்டதாக இது விளங்குகிறது.

இதன் முகப்பு தோற்றம் ஜீப் சி.ஜே. 15 மாடலைப் போல உள்ளது. இதன் பின்புறத்தில் விளக்குகள் நேர்த்தியாக, தொலைவிலிருந்து பார்த்தாலும் மிகச் சிறப்பாக ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள ஸ்டெப்னி டயரால் எந்த வகையிலும் விளக்கு வெளிச்சம் பாதிக்கப்படாத வகையில் வாகனத்தின் பின்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. 



உள்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 8.4 அங்குல இன்போடெயின்மென்ட் திரை உள்ளது. டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டது. பின் இருக்கை பயணிகளுக்கென பின் பகுதியில் ஏ.சி. வென்ட் உள்ளது. இது சிறந்த குளிர்ச்சியை அளிக்கிறது. மேலும் அனைத்து பயணிகளும் சவுகரியமாக பயணிக்கும் வகையில் அதிக இட வசதி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வசதியாக 12 வோல்ட் யு.எஸ்.பி. போர்ட் இதில் உள்ளன. 2019 ஜீப் ராங்கலர் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கபப்ட்டுள்ளது. இந்த என்ஜின் 268 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.
Tags:    

Similar News