ஆட்டோமொபைல்
பறக்கும் கார் சோதனையில் வெற்றி - ஜப்பான் நிறுவனம் அசத்தல்
ஜப்பானில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை சமீபத்தில் நடைபெற்றது. சோதனை முடிவு விவரங்களை பார்ப்போம்.
ஜப்பானின் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான என்.இ.சி. கார்ப் பறக்கும் காரை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதன்படி பறக்கும் காரை உருவாக்கி அதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பெரிய ஆளில்லா விமானம் போல் காட்சியளித்த பறக்கும் காரின் மேலே நான்கு இறக்கைகள் போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சோதனை ஓட்டத்தின் போது பறக்கும் கார் தரையில் இருந்து மேலே 3 மீட்டர் உயரம் பறந்து சென்றது. சுமார் ஒரு நிமிட நேரம் வானில் வட்டமடித்தப்படி சென்றது. பறக்கும் கார் உருவாக்குவதில் ஜப்பான் அரசு ஆதரவாக உள்ளது. பறக்கும் கார்களை 2030-ம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் ஜப்பான் அரசு முனைப்புடன் உள்ளது.
2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, பூகம்பம் மற்றும் அணுசக்தி பேரழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளால் ஜப்பான் அரசு பறக்கும் கார்களை மீட்பு பணிகளில் ஈடுபடுத்த உதவும் என்று இந்த திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.
அதேபோன்று மத்திய ஜப்பானில் உள்ள மை என்ற தீவு பகுதிகளை இனைக்கும் வகையில் போக்குவரத்துக்கு பறக்கும் கார்கள் உதவும் என்று அரசு நம்புகிறது. 2017-ம் ஆண்டு பறக்கும் கார் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் பறக்கும் கார் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது.
அதன்பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகள் வடிவமைப்புகளுக்கு பின் தற்போது பறக்கும் கார் சோதனை வெற்றிகரமாக முடிந்து உள்ளது. இதுகுறித்து என்.இ.சி. அதிகாரிகள் கூறும்போது, பறக்கும் கார்களை ஆளில்லா விமானம் போல் வரவழைத்து பொருட்களை டெலிவரி செய்யவே உருவாக்கினோம். ஆனால் தற்போது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் மூலம் மற்ற பயன்பாடுகளுக்காக உருவாக்கி வருகிறோம் என்றார்.