ஆட்டோமொபைல்
டி.வி.எஸ். எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரம்
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ற வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் திறன் மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்களை அடுத்த ஆண்டின் இரண்டாவது நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 1, 2020-க்கு பின் விற்பனையாகும் வாகனங்கள் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்த வேண்டும் என்ற விதிமுறை அமலாக இருக்கும் பட்சத்தில், அடுத்தாண்டு துவக்கத்திலேயே பி.எஸ். 6 ரக வாகனங்களை டி.வி.எஸ். அறிமுகம் செய்யலாம்.
பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் இந்தியாவின் ஒரே வாகனமாக ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் மாடல் இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் இதற்கான அனுமதியை கடந்த மாதம் பெற்றது. இதுதவிர ஹோண்டா நிறுவனமும் தனது பி.எஸ். ஆக்டிவா 125 ஸ்கூட்டரை இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
பல்வேறு நிறுவனங்கள் பி.எஸ். 6 வாகனங்களை அறிமுகம் செய்ய துவங்கியிருக்கும் நிலையில், டி.வி.எஸ். இந்த தொழில்நுட்பத்தை வழங்குவதில் தாமதம் காட்டுகிறது. எனினும், டி.வி.எஸ். நிறுவனம் சமீபத்தில் எத்தனால் மூலம் இயங்கும் முதல் வாகனமாக அபாச்சி ஆர்.டி.ஆர். 200 Fi E100 மாடலை அறிமுகம் செய்தது.
டி.வி.எஸ். நிறுவன வாகனங்களில் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி, ஆர்.டி.ஆர். 200 4வி மற்றும் ஆர்.ஆர். 310 போன்ற மாடல்களில் மட்டுமே ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றுக்கு முதலில் பி.எஸ். 6 அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்திய க்ரியான் கான்செப்ட் மாடலை தழுவிய எலெக்ட்ரானிக் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.