தொழில்நுட்பம்

இந்தியாவில் மீண்டும் முதலிடம் - சீன நிறுவனத்தை பின்தள்ளிய சாம்சங்

Published On 2019-05-11 09:53 GMT   |   Update On 2019-05-11 09:53 GMT
இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தை பின்தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.



இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளில் சீன ஸ்மார்ட்போன் நிறுவமான ஒன்பிளஸ் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், 2019 ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதாக கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விற்பனையே சாம்சங் மீண்டும் முதலிடத்தை பிடிக்க காரணமாக அமைந்தது என கவுன்ட்டர்பாயின்ட் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மட்டும் சுமார் 90 சதவிகித பங்குகளை பெற்றிருக்கின்றன.

2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனங்கள் 95 சதவிகித பங்குகளை பெற்றிருந்தன. முதலிடத்தை இழந்த நிலையிலும், 2019 முதல் காலாண்டில் அதிகம் விற்பனையான பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 6டி இருக்கிறது. “கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் 6டி மாடல்களின் வெற்றி இந்திய பிரீமியம் சந்தையின் டிரெண்ட் ஆக பார்க்கப்படுகிறது.” என கவுன்ட்டர்பாயின்ட் நிறுவன ஆய்வாளர் கரன் சவுஹான் தெரிவித்தார். 



“கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மூலம் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தில் அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அம்சங்களை வழங்கினோம். கேலக்ஸி எஸ்10 மாடலின் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் மீண்டும் முதலிடம் பிடித்திருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை” என சாம்சங் இந்தியா மொபைல் பிரிவு தலைவர் ஆதித்யா பப்பர் தெரிவித்தார். 

மற்ற ஸ்மார்ட்போன் பிராண்டுகளான ஹூவாய் பத்து சதவிகித பங்குகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஹூவாயின் மேட் மற்றும் பி சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் சமீபத்தில் களமிறங்கியிருக்கின்றன. இவை இதுவரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் அதிக விலை காரணமாக சரிவை சமாளிக்க தொடர்ந்து போராடி வருகிறது.
Tags:    

Similar News