தொழில்நுட்பம்

உலகில் முதல் முறையாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிப்செட் - கால் டிராப் பிரச்சனையை சரி செய்திடுமாம்

Published On 2019-01-02 05:18 GMT   |   Update On 2019-01-02 05:18 GMT
இந்தியாவில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்ய உதவும் புதிய சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. #5G



இந்திய டெலிகாம் சந்தையில் கால் டிராப் பிரச்சனையை சரி செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் எலெக்டிரானிக் சிப்செட்டை பெங்களூருவை சேர்ந்த சான்க்யா லேப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. கால் டிராப் பிரச்சனை மட்டுமின்றி 5ஜி இணைப்புக்களில் புதிய சிப்செட் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன சாதனங்களில் இதுவரை பயன்படுத்தப்படும் அனைத்துவித மின்னணு சிப்செட்களும் வெளிநாட்டு நிறுவனங்கள் உருவாக்கியவை ஆகும். இந்தியாவில் செமிகன்டக்டர் உற்பத்தி ஆலை இல்லாததே இதற்கு காரணமாக இருக்கிறது. சான்க்யா லேப்ஸ் பயன்படுத்தும் சிப்செட்களும் தென் கொரியாவில் இயங்கி வரும் சாம்சங் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 

புதிய சிப்செட் மொபைல் நெட்வொர்க்கில் இருந்து வீடியோ தரவுகளை பிரிக்கும் என்பதால் அழைப்பு தரம் உயரும் என சான்க்யா லேப்ஸ் நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பராக் நாயக் தெரிவித்தார். 



சான்க்யாவின் பிரித்வி 3 சிப்செட் மொபைல் போன்களில் நேரடி வீடியோ டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்குவதோடு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சாட்டிலைட் போனாக மாற்றும் திறன் கொண்டிருக்கிறது. பிரித்வி 3 சிப்செட் வெளியீட்டு நிகழ்வில் டெலிகாம் துறை மந்திரி மனோஜ் சின்கா கலந்து கொண்டு, புதிய சிப்செட்டை அறிமுகம் செய்தார்.

புதிய சிப்செட் சார்ந்த மொபைல் போன் உபகரணங்களை டாங்கிள் வடிவிலும் மொபைல் போன்களாகவும் அடுத்த சில ஆண்டுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என நாயக் மேலும் தெரிவித்தார்.  

செமிகன்டக்டர் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்க சில காலம் ஆகும். உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த சிப்செட்டை அவர்கள் உருவாக்கும் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்துவர். 5ஜி சேவைகளில் எங்களது தொழில்நுட்பத்தை வழங்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம் என நாயக் தெரிவித்தார்.
Tags:    

Similar News