தொழில்நுட்பம்
ஒரே மாதத்தில் 1.3 கோடி பேர் ஜியோ நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர்
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1.3 கோடி பேர் இணைந்திருக்கின்றனர். #RelianceJio
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1.3 கோடி பேர் இணைந்துள்ளனர். இதே மாதத்தில் பாரதி ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக ஒரு கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருந்த அறிக்கையின் படி ஆகஸ்டு மாதத்தில் ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 23.9 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 2018 வரை நிறைவுற்ற நிதிநிலை வருவாய் அறிக்கையின் படி, ஜியோ நெட்வொர்க்கை சுமார் 25.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளது. இது ஆகஸ்டு மாதத்தை விட 1.3 கோடி வரை அதிகமாகும்.
ஜியோ பயனர் எண்ணிக்கை குறித்து செல்லுலார் ஆப்பரேட்டர் அமைப்பு சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் இதில் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். மற்றும் இதர நிறுவனங்கள் குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. இவை செல்லுலார் ஆப்பரேட்டர் அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை என்பதால் இவற்றின் விவரங்கள் வெளியாகவில்லை.
மற்ற நிறுவனங்களை பொறுத்த வரை ஏர்டெல், நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆகஸ்டு மாதம் 34.58 கோடி பேர் ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வந்த நிலையில், இந்த எண்ணிக்கை செப்டம்பரில் குறைந்து தற்சமயம் 34.35 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோன்று ஐடியா செல்லுலார் நிறுவன வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஆகஸ்டு மாதம் 21.71 கோடியாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 21.31 கோடியாக குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 40.61 லடசம் பேர் ஐடியா சேவையில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இரண்டு மாதங்களில் வோடபோன் நிறுவனம் 37.67 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. செப்டம்பர் மாதம் வரை வோடபோன் நிறுவனம் சுமார் 22.44 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.