செய்திகள்

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை - 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பலி

Published On 2019-06-10 01:05 GMT   |   Update On 2019-06-10 01:05 GMT
ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச்சாவடியில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 போலீஸ் அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், பாதுகாப்பு படைகளையும், போலீஸ் சோதனைச்சாவடிகளையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில் அங்கு தக்கார் மாகாணத்தில் கததவ்ஜா பகாவ்தீன் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி ஒன்றை நேற்று அதிகாலை 3 மணிக்கு தலீபான் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

உடனே போலீசாரும் சுதாரித்துக்கொண்டு தங்கள் துப்பாக்கிகளால் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே 2 மணி நேரத்துக்கும் மேலாக துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இந்த சண்டையின் முடிவில் 5 போலீஸ் அதிகாரிகள், ஒரு போலீஸ்காரர் என 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகின்றனர். தலீபான் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையையும் அவர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு, பாராஹ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 6 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர்.
Tags:    

Similar News