செய்திகள்

அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் 5ஜி சேவை தொடங்க அனுமதி அளித்தது சீனா

Published On 2019-06-06 12:55 GMT   |   Update On 2019-06-06 12:55 GMT
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வரும் நிலையில், சீனாவில் 5ஜி சேவை தொடங்க அரசுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
பீஜிங்:

சீனாவில் 5ஜி சேவைக்கான உரிமம் வழங்கும் நிகழ்ச்சி தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மியா வெய் தலைமையில் நடைபெற்றது. இதில், சீனா டெலிகாம், சீனா மொபைல், சீனா யூனிகாம் மற்றும் சீனா வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றிற்கு, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான உரிமத்தை வழங்கியுள்ளது. 

5ஜி தொழில்நுட்பம் என்பது தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜி யின் பதிவிறக்க வேகத்தை விட 10 முதல் 100 மடங்கு அதிவேகமானதாகும்.

இதுபற்றி சீன அதிகாரிகள் கூறுகையில், இந்த சேவையானது தொழில்துறை உற்பத்தி, இணையத்தின் வழி இயங்கும் வாகனங்கள், சுகாதாரம், மிடுக்கு நகர (ஸ்மார்ட் சிட்டி) மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற துறைகளை மேம்படுத்த பெரிதும் உதவும் என்றனர். 

அமெரிக்காவுடனான பொருளாதாரப் போருக்கும் இந்த அறிவிப்பிற்கும் தொடர்பு உள்ளதா, இதன் மூலம் சீன நிறுவனங்களான ஹுவாய் , இசட்.டி.இ (ZTE) போன்றவற்றிற்கு நன்மை ஏதேனும் உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் சுவாங் பதிலளிக்கையில், வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் பங்கேற்கலாம், என்றார்.

மேலும் அமைச்சர் மியா வெய் கூறுகையில், 5ஜி சேவையானது புதிய வாய்ப்புகளை உருவாக்கி சீனாவின் மின்னணு பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும், என கூறினார்.
Tags:    

Similar News