செய்திகள்

டிரம்ப் நிர்வாகத்தின் கெடுபிடிகளால் ‘எச்1 பி’ விசா வினியோகத்தில் சரிவு

Published On 2019-06-05 18:58 GMT   |   Update On 2019-06-05 18:58 GMT
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் கெடுபிடிகளால் கடந்த ஆண்டு ‘எச்1 பி’ விசா வினியோகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.

இந்த விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்களது பணி சிறப்பாக அமையும் பட்சத்தில் மேலும் 3 ஆண்டு காலம் எச்1 பி விசாவை நீட்டித்து கொள்ளலாம்.

இவ்வாறு 6 ஆண்டு பணிபுரிந்த பிறகு அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்றுவதற்கான கிரீன் அட்டையை அவர்கள் பெற முடியும். இதனால் அமெரிக்காவில் எச்1 பி விசாவுக்கு எப்போதும் மவுசு அதிகம்.



இந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும். அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.

இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.

அந்த வகையில் ‘எச்1 பி’ விசா பெறும் நடைமுறையில் பல்வேறு புதிய விதிமுறைகளை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது. இந்த கெடுபிடிகளால், கடந்த ஆண்டில் ‘எச்1 பி’ விசா பெறுவோர் எண்ணிக்கை 10 சதவீதம் சரிந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை(யுஎஸ்சிஐஎஸ்) புள்ளிவிவர கணக்கின்படி, கடந்த 2017 நிதி ஆண்டில் 37 லட்சத்துக்கு 3 ஆயிரத்து 400 பேருக்கு ‘எச்1 பி’ விசா வழங்கப்பட்டது.

ஆனால் இது கடந்த நிதி ஆண்டில் 10 சதவீதம் குறைந்து, 33 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே ‘எச்1 பி’ விசா வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் நடப்பு நிதி ஆண்டிலும் ‘எச்1 பி’ விசாவுக்கு ஒப்புதல் வழங்கும் அளவு கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 85 சதவீதம் விசா ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அது தற்போது 79 சதவீதமாக குறைந்துவிட்டது.

‘எச்1 பி’ விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் 2017-ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் குறைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் 40 லட்சத்து 3,300 பேர் ‘எச்1 பி’ விசாவுக்கு விண்ணப்பித்த நிலையில், கடந்த ஆண்டில் 39 லட்சத்து 6,300 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், மிச்சிகன் மாகாணத்தில் இயங்கும் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம், ஐ.டி. நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாவில் பணிக்கு சேர்ந்த 594 பணியாளர்களுக்கு விடுமுறை காலத்தில் பணியிடம் பூட்டப்பட்டிருந்த போது தரவேண்டிய ஊதியத்தை வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர்.

பணியாளர் தீர்ப்பாயமான, அமெரிக்க தொழிலாளர் ஊதியம் மற்றும் பணி நேரப் பிரிவு துறையிடம் இதுகுறித்து முறையிடப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7 கோடியே 62 லட்சம்) நிலுவை ஊதியத்தை வழங்க உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News