செய்திகள்

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றவரை ரகசிய போலீசார் சுட்டுப் பிடித்தனர்

Published On 2019-06-03 05:14 GMT   |   Update On 2019-06-03 05:14 GMT
வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை ரகசிய போலீசார் துப்பாக்கியால் சுட்டு, மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.
வாஷிங்டன்:

வாஷிங்டன் நகரின் கேப்பிட்டல் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அளவுகடந்த உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சுற்றிலும் ஆறடுக்குகளை கொண்ட பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் வழக்கம்போல் நேற்று தனது பணிகளை கவனித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டு பயணத்துக்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் வெளியேறிய சில நிமிடங்களில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் பாதுகாவலர்களின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்றார்.



இதை தூரத்தில் இருந்து கவனித்துவிட்ட ரகசிய போலீசார், அவரை பின்வாங்கிச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவர் முன்நோக்கிச் சென்றார்.

உடனடியாக ரகசிய போலீசார் துப்பாக்கியால் சுட்டவாறு அந்த மர்மநபரை நோக்கி ஓடினர். துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் நிலைதடுமாறி விழுந்த அவரை கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

Similar News