செய்திகள்
பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் தொலைபேசி மூலம் வாழ்த்து
இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்ட பின்னர், புதிதாக அமையும் ஆட்சியிலாவது பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அமைதி பேச்சுக்கு நல்ல வாய்ப்பு அமையும் என்று நம்புவதாக கடந்த மாதம் இம்ரான் கான் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்கும் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
அவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மோடி, வறுமையை ஒழிப்பதில் இருநாடுகளும் கூட்டாக பாடுபட வேண்டும் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டை இன்றும் இம்ரான் கானிடம் வலியுறுத்தினார்.
மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளங்கள் நிலவுவதற்கு வன்முறை மற்றும் பயங்கரவாதமற்ற சூழ்நிலையும், நம்பிக்கையுணர்வும் மிகவும் முக்கியம் என்றும் மோடி அறிவுறுத்தினார்.