செய்திகள்
பெரு நாட்டில் 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்
தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள பெரு நாட்டை இன்று 8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
லிமா:
தென்னமெரிக்கா கண்டத்தில் அழகிய அமேசான் காடுகள் மற்றும் கண்ணை கவரும் மச்சு பிச்சு மலைத்தொடர்கள் என இயற்கை எழில்சூழ அமைந்துள்ள பெரு நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.11 மணியளவில் அல்ட்டோ அமேசானஸ் மாகாணத்தின் லகுனாஸ் மாவட்டத்தின் தென்கிழக்கே சுமார் 83 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 105 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கடுக்கத்தின் தாக்கத்தை 8 ரிக்டர்களாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் மதிப்பீடு செய்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகாமையில் உள்ள பிரேசில், கொலம்பியா மற்றும் ஈக்குவேடார் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ளன. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.