செய்திகள்

இலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

Published On 2019-05-22 14:35 GMT   |   Update On 2019-05-22 14:35 GMT
250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உள்பட 250-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.



இச்சம்பவம் தொடர்பாக 89 பேர் கைது செய்து விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடந்த மாதம் 22-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த அவசரநிலை உத்தரவைமேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும் அரசு அறிவிக்கையில் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்பமிட்டுள்ளார்.
Tags:    

Similar News