செய்திகள்

கருவில் உள்ள குழந்தைக்கு முதுகெலும்பு ஆப்ரேஷன் - லண்டன் டாக்டர்கள் சாதனை

Published On 2019-05-17 10:37 GMT   |   Update On 2019-05-17 10:37 GMT
கருவில் இருந்த குழந்தையின் முதுகெலும்பு சரிவர அமையாததால், கருவிலேயே முதுகெலும்பு ஆப்ரேஷனை செய்து முடித்து லண்டன் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
லண்டன்:

லண்டனில் உள்ள மேற்கு சாசெக்ஸ் பகுதியில் வசிப்பவர் ஷெர்ரி ஷார்ப்(29). திருமணமான இவர், கருவுற்று 20 வாரங்கள் கழித்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

லண்டனில் புகழ்ப்பெற்ற கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், கருவில் குழந்தையை ஸ்கேன் செய்து பார்க்கும்போது அதிர்ச்சியூட்டும் தகவலை கண்டறிந்தனர்.

ஷெர்ரியிடம், உங்கள் குழந்தையின் முதுகெலும்பு சீராக இல்லை எனவும்,  மற்ற குழந்தைகளை போல் நடக்க முடியாமல் போகலாம் எனவும்கூறியுள்ளனர். மேலும் சீராக அமையாத இந்த முதுகெலும்பினால் முடக்குவாதம், கால்களில் உணர்வு இழப்பு, சிறுநீர்ப்பை மற்றும் குடல் நோய் பிரச்சினைகள் என பல்வேறு விளைவுகளை குழந்தை சந்திக்க நேரிடும் எனவும் கூறினர்.

இதையடுத்து 27 வாரங்கள் ஆன நிலையில், கருவில் இருக்கும் ஜாக்சன் எனப்பெயரிடப்பட்ட அந்த குழந்தையின், குறைபாட்டினை ஆப்ரேஷன் செய்தால் குணப்படுத்தி விடலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் நலன் கருதி, சிக்கலான இந்த ஆப்ரேஷனுக்கு ஒப்புக் கொண்டார்.



இந்நிலையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருவில் இருக்கும் ஜாக்சனுக்கு வெற்றிகரமாக ஆப்ரேஷன் செய்து முடித்தனர். ஷெர்ரி மற்றும் ஜாக்சன் ஆகியோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த ஆப்ரேஷன் முடிந்து 6 வாரங்களுக்கு பின்னர் ஜாக்சனை ஷெர்ரி பிரசவித்தார். கிங்ஸ் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஜாக்சன் தற்போது வைக்கப்பட்டுள்ளான்.

பிரிட்டன் நாட்டில் இது போன்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News