செய்திகள்

அமெரிக்காவில் திறமையுள்ள வெளிநாட்டினருக்கு 57 சதவீதம் குடியுரிமை -இந்தியர்கள் அதிகம் பயனடைவார்கள்

Published On 2019-05-17 10:07 GMT   |   Update On 2019-05-17 10:07 GMT
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ள அதிபர் டிரம்ப் தகுதி, திறமையின் அடிப்படையில் 57 சதவீதம் வெளிநாட்டினருக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம் பேருக்கும் திறமை அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது.

இந்த முறையில் மாற்றம் செய்து வேலை மற்றும் திறமை அடிப்படையில் 57சதவீதம் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டுகளுக்கு பதிலாக ‘அமெரிக்காவை கட்டமைக்கும்’ (Build America visa) குடியுரிமைகளை வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

தற்போதைய குடியுரிமை சட்டங்கள் மேதாவிகள் மற்றும் புத்திசாலிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளன. மிகவும் குறைந்த கூலி வாங்குபவர்கள்தான் வெளிநாடுகளில் இருந்து இங்கு அதிகமாக வருகின்றனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

நாம் உருவாக்க விரும்பும் அமெரிக்காவுக்காக வெளிநாட்டினருக்கு கதவுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆனால், இவர்களில் பெரும்பகுதியினர் தகுதி மற்றும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இப்படிப்பட்டவர்களுக்கு தற்போது 12 சதவீதமாக வழங்கப்படும் குடியுரிமையை 57 சதவீதமாக உயர்த்தவும் தேவைப்பட்டால் அதற்கு மேல் அதிகரிக்கவும் வேண்டிய மிகப்பெரிய மாற்றத்தை நாம் செய்ய வேண்டியுள்ளது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


இந்தமுறை அமல்படுத்தப்பட்டால் ‘எச்.1பி.’ விசாவில் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே ‘எச்.1பி.’ விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர், கடந்த பல ஆண்டுகளாக ‘கிரீன்கார்டு’ பெறுவதற்காக விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த புதிய திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைய உள்ளது.

டிரம்பின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் சம்மதம் தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திட்டம் குறித்து ஆளும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு டிரம்ப் விளக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இத்திட்டத்துக்கு ஜனநாயக கட்சியினர் ஒப்புக்கொண்டால் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், மறுத்துவிட்டால் இந்த விவகாரத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பிரச்சனையாக எழுப்பவும் ஆளும் குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News