செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலி

Published On 2019-05-17 00:17 GMT   |   Update On 2019-05-17 00:17 GMT
ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளோடு அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறபோதும், தலீபான்களின் அட்டூழியம் குறைந்தபாடில்லை.

தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் அவர்களின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாபூல் மாகாணத்தில் சாய்வாரா என்ற நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

எனினும் உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இதில், 10 பயங்கரவாதிகள் பலியாகினர். அதே சமயம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிர் இழந்தனர். 3 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையில் பால்க் மாகாணத்தின், பால்க் மாவட்டத்தில் உள்ள தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவர் உள்பட 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 
Tags:    

Similar News