செய்திகள்

சீனப் பிரதமருடன் இம்ரான் கான் சந்திப்பு - பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை

Published On 2019-04-28 11:11 GMT   |   Update On 2019-04-28 11:11 GMT
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று பீஜிங் நகரில் சீனப் பிரதமர் லி கெக்கியாங்-ஐ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #ImranKhan #LiKeqiang
பீஜிங்:

வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.

பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.
 
தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. சீனா, மலேசியா ஆகிய சில நாடுகள் பாகிஸ்தானுக்கு குறுகியகால நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சீனா வந்துள்ளார்.

தலைநகர் பீஜிங்-கில் இன்று சீனப் பிரதமர் லி கெக்கியாங்-ஐ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார மண்டலத்தின் கட்டமைப்பு பணிகளை விரைவுப்படுத்தவும்  இருநாடுகளுக்கு இடையிலான எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்துறை அபிவிருத்தி மற்றும் பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் சீன அரசு தயாராக இருப்பதாக பிரதமர் லி கெக்கியாங் குறிப்பிட்டார்.



முன்னதாக நேற்று சீனா துணை அதிபர் வாங் கிஷான் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியை இம்ரான் கான் சந்தித்துப் பேசினார். #Chinesepremier #Chinesepremiermeets #PakistaniPM #ImranKhan #LiKeqiang
Tags:    

Similar News