செய்திகள்

லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு: எச்.எம். ஜெயில் அடைக்கப்படுகிறார்

Published On 2019-03-20 15:55 GMT   |   Update On 2019-03-20 15:55 GMT
லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், எச்.எம். ஜெயில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். #NiravModi
லண்டன்:

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. அவரை நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து நிரவ் மோடியை லண்டன் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதத்தை முன்வைத்தது.

நிரவ் மோடி சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மார்ச் 29 வரை காவலில் வைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நிரவ் மோடி வாண்ட்ஸ்வொர்த்தில் உள்ள எச்.எம். ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #NiravModiExtradition #LondonCourt
Tags:    

Similar News