செய்திகள்

வெனிசுலா எண்ணெய் நிறுவனம் மீதான தடையை தளர்த்த அமெரிக்கா புதிய நிபந்தனை

Published On 2019-01-29 06:54 GMT   |   Update On 2019-01-29 06:54 GMT
வெனிசுலா நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீதான தடையை தளர்த்துவதற்கு, அமெரிக்கா புதிய நிபந்தனையை விதித்துள்ளது. #VenezuelaOilCompany #USSanctions #NickolasMaduro
வாஷிங்டன்:

எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த மே மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், அதிபர் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இம்மாதத் தொடக்கத்தில் அவர் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையே பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகருமான ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து, அதிபராக அங்கீரித்துள்ளன. அத்துடன், அதிபர் நிகோலஸ் மதுரோ அதிகாரத்தை ஜூவான் கெய்டோவிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், ஜூவான் கெய்டோவின் நியமனத்தை அதிபர் மதுரோ ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன் அமெரிக்காவுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாகவும் அறிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ஜூவான் கெய்டோவுக்கோ அமெரிக்க தூதர்களுக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா பதிலடி தரும் என்றார்.



இந்நிலையில், அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஸ்டீவன் மனுச்சின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெனிசுலா அதிபர் மதுரோ, தற்காலிக அதிபராக அறிவித்துள்ள ஜூவான் கெய்டோவிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தும் என்று கூறினார்.

பிடிவிஎஸ்ஏ நிறுவனம் மீது நேற்று புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது. #VenezuelaOilCompany #USSanctions #NickolasMaduro

Tags:    

Similar News