செய்திகள்

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு - எந்திரங்களை வடிவமைத்த இணைய நிபுணர் தகவல்

Published On 2019-01-21 22:55 GMT   |   Update On 2019-01-21 22:55 GMT
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மூலமாக 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இந்நிலையில், அந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த சையது சுஜா என்ற இணைய நிபுணர் தெரிவித்துள்ளார்.

அவர் லண்டனில் இருந்து ‘ஸ்கைப்’ மூலமாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

நான் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்னணு கழகத்தில் பணியாற்றினேன். 2014-ம் ஆண்டு தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த குழுவில் நானும் இருந்தேன். அப்போது, அந்த எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா? என்றும், எப்படி செய்யலாம்? என்றும் கண்டறியுமாறு எங்களை மின்னணு கழகம் கேட்டுக்கொண்டது. அதன்படி, அந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்தது.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார். அதை ‘கொலை’ என்று வழக்கு பதிய முயன்ற என்.ஐ.ஏ. அதிகாரியும் கொல்லப்பட்டார். என் குழுவினரும் கொல்லப்பட்டதால், நான் பயந்துபோய் நாட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

பா.ஜனதா மட்டுமின்றி, காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தேர்தல் தில்லுமுல்லு விவகாரத்தை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

அதே சமயத்தில், ஓட்டுப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் உறுதிபட தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News