செய்திகள்

ஊழல் வழக்கில் நவாஸ் செரீப் விடுதலையை எதிர்த்த வழக்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2019-01-14 14:45 GMT   |   Update On 2019-01-14 14:45 GMT
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #PakistanSC #SCdismissesdismisses #NawazSharif
இஸ்லாமாபாத்:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
 
இவ்வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார்.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பொறுப்புடைமை நீதிமன்றம் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதாக தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொறுப்புடைமை நீதிமன்றம் மேல் முறையீடு செய்தது. 

இவ்வழக்கு நீதிபதி அசீப் சையத் கோசா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னர் இஸ்லாமாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதி பொறுப்புடைமை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

முன்னதாக, நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வந்தன. 

இவ்வழக்குகளில் 24-12-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் செரீப்பை விடுவித்தும், அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அர்ஷத் முஹம்மத் மாலிக் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanSC #SCdismissesdismisses #NawazSharif  #NawazSharifgraftcase #NawazSharifsentence 
Tags:    

Similar News