செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவு, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்தது

Published On 2019-01-06 11:31 GMT   |   Update On 2019-01-06 11:31 GMT
பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. #PhilippinesFloods #PhilippinesFlood
மணிலா:

தென்கிழக்காசியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் சுமார் 7 ஆயிரம் தீவு கூட்டங்களை உள்ளடக்கியதாக  பிலிப்பைன்ஸ் நாடு அமைந்துள்ளது.

இந்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 புயல்கள் உருவாகின்றன. இந்த புயல்கள் உருவாகும் போதெல்லாம் பெய்யும் கனமழையால் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், 29-12-2018 அன்று உருவான உஸ்மான் என்னும் புதிய புயலின் எதிரொலியாக அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய அளவிலான மழை இரண்டே நாட்களில் பெய்ததால் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பெரிய அளவிலான பாதிப்புக்கு உள்ளாகின.
 
கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடியது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பும் முடங்கியது.

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 75 பேர் உயிரிழந்ததாக கடந்த முதல் தேதி தகவல் வெளியானது. இந்நிலையில், வெள்ளம் வடிந்த பின்னர் கிடைத்த பிரேதங்கள் மற்றும் மண்ணுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் நேற்றுவரை பலியானோர் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், காணாமல் போனதாக கருதப்படும் 26 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #PhilippinesFloods #PhilippinesFlood
Tags:    

Similar News