செய்திகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மீதான இரு ஊழல் வழக்குகளில் 24-ம் தீர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மீதான மேலும் இரு ஊழல் வழக்குகளில் அந்நாட்டின் பொறுப்புடைமை நீதிமன்றம் வரும் 24-ம் தீர்ப்பு வழங்கவுள்ளது. #Pakistancourt #nawazsharif
இஸ்லாமாபாத்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார்.
இதற்கிடையில், நவாஸ் ஷரிபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி முஹம்மது அர்ஷத் மாலிக் இன்று அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பு நவாஸ் ஷரிப்புக்கு பாதகமாக அமைந்தால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistancourt #nawazsharif