செய்திகள்

பாகிஸ்தானுக்கு நிதி திரட்ட ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் இம்ரான் கான்

Published On 2018-11-18 11:09 GMT   |   Update On 2018-11-18 11:09 GMT
20 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு பொருளாதார சிக்கலில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நிதி திரட்ட அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். #PakistanPM #ImranKhan #ImranKhanUAEvisit #financialassistance
அபுதாபி:

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். 

உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான அரசு செலவினங்களுக்கு மட்டும் 1200 கோடி டாலர்கள் பணம் தேவைப்படும் நிலையில் சமீபத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். 

பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி டாலர்களை அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. 

இதேபோல் நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் பயணமாக கடந்த வாரம் சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 600 கோடி டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. இந்த வாரம் மலேசியாவுக்கு செல்லவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு மேலும் சுமார் 600 கோடி டாலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் இம்ரான் கான் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு  சென்றுள்ளார்.

அவருடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மெஹ்மூத் குரைஷி, நிதி மந்திரி அஸாத் உமர் ஆகியோரும் சென்றுள்ளனர்.

அபுதாபி நகரில் உள்ள அதிபர் மாளிகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரும் அந்நாட்டின் முப்படைகளின் துணை தளபதியுமான ஷேக் முஹம்மது பின் சயித்-ஐ இன்று அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். #PakistanPM #ImranKhan #ImranKhanUAEvisit #financialassistance
Tags:    

Similar News