பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #Pakistanmilitarycourt
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அங்கு பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள், ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள் என 202 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த ராணுவ சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதிகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. மேலும் 7 பயங்கரவாதிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா உறுதிப்படுத்தியதாக ராணுவத்தின் செய்திப்பிரிவு தெரிவித்து உள்ளது. #Pakistanmilitarycourt