பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி இன்று 15-வது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பட்டேலை மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா இன்று சந்தித்தார். #HardikPatel #fastforquota
மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடரும் ஹர்திக் பட்டேலுடன் ஆ.ராசா சந்திப்பு
பதிவு: செப்டம்பர் 08, 2018 19:33
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து மீண்டும் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவரது போராட்டம் நேற்று 13-வது நாளாக நீடித்த நிலையில் நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காந்திநகர் பகுதியில் உள்ள எஸ்.ஜி.வி.பி. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹர்திக் பட்டேல் அங்கும் தனது உண்ணாவிரதத்தை இன்று பதினைந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய முன்னாள் மந்திரியுமான ஆ.ராசா உள்ளிட்டோர் இன்று மருத்துவமனைக்கு சென்று ஹர்திக் பட்டேலை சந்தித்தனர். #HardikPatel #fastforquota