பாகிஸ்தானில் பிரதமர், ஜனாதிபதி உள்பட அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #ImranKhan
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெக்ரிக்-இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார்.
அவர் பிரதமராக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆடம்பரமான பிரதமர் பங்களாவில் தங்க மறுத்துவிட்டார். அங்குள்ள 33 புல்லட் புரூப் கார்களை பயன்படுத்த போவதில்லை என்றும், அவற்றில் 2 கார்கள் மட்டும் பயன்படுத்த போவதாகவும் அறிவித்தார்.
பிரதமர் பங்களாவிற்கு பதிலாக குறைந்த வசதிகள் கொண்ட ராணுவ செயலாளரின் 3 படுக்கை அறை வசதியுள்ள வீட்டில் தங்க போவதாகவும், 2 பணியாளர்கள் மட்டுமே வைத்து கொள்ள போவதாகவும் தெரிவித்தார். கவர்னர் மாளிகைகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கு செய்யப்படும் ஆடம்பர செலவுகள் நிறுத்தப்படும் என்றும் கூறினார்.
இந்த உத்தரவு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தகவல் தொடர்பு துறை மந்திரி பவாத் சவுத்ரி தெரிவித்தார்.
தடை உத்தரவு தலைமை ராணுவ தளபதிக்கும் பொருந்துமா என நிருபர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் தலைமை ராணுவ தளபதியும் முதல் வகுப்பு விமான பயணம் மேற்கொள்ள முடியாது. அவர் எப்போதும் ‘பிசினஸ்’ வகுப்பு பயணமே மேற்கொள்கிறார் என்றார்.
மேலும் கூறும் போது வீண் செலவை தடுக்க பிரதமர், ஜனாதிபதி மற்றும் அரசு அதிகாரிகளும் முதல் வகுப்பு விமான பயணம் மேற்கொள்ள கேபினட் கூட்டத்தில் அனுமதி மறுத்து முடிவெடுக்கபபட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே, வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணத்துக்கு சிறப்பு விமானம் பயன்படுத்துவதில்லை என பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #ImranKhanPrimeMinister