செய்திகள்

உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கள்ளக்காதலியின் மகனை கத்தியால் குத்திய எலக்ட்ரீசியன்

Published On 2019-06-10 17:40 GMT   |   Update On 2019-06-10 17:40 GMT
கோவை கிணத்துக்கடவு அருகே உல்லாசத்துக்கு வர மறுத்ததால் கள்ளக்காதலியின் மகனை கத்தியால் குத்திய எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிணத்துக்கடவு:

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் கிரி பிரசாத். இவரது மனைவி பத்மபிரியா (வயது 43). இவர்களுக்கு மோகன்பிரபு (20), அஜித் (15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அஜித் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கிரி பிரசாத் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். இதனால் பத்மபிரியா தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பத்ம பிரியாவுக்கு அண்ணா நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் அய்யாசாமி (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. மகன்கள் இல்லாத நேரத்தில் 2 பேரும் ஜாலியாக இருந்து வந்தனர்.

இந்த விவகாரம் பத்ம பிரியாவின் மகன்களுக்கு தெரிய வரவே அவர்கள் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறினர். இதனால் அவர் தனது கள்ளக்காதலனை சந்திக்க மறுத்து வந்தார். ஆனாலும் அடிக்கடி அய்யாசாமி வந்து பத்ம பிரியாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

நேற்று பத்ம பிரியாவின் 2-வது மகன் அஜித் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தார். அவரை உனது தாய் அழைத்து வர சொன்னதாக கூறி அய்யாசாமி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்துச் சென்றார்.

பின்னர் கிணத்துக்கடவு மேம்பாலத்துக்கு அழைத்து சென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அஜித்தின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அஜித்தை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் இது குறித்து பத்ம பிரியா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அய்யாசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News