செய்திகள்

போடி அருகே வேலை வாங்கித் தருவதாக பெண்ணை கற்பழித்த வாலிபர்

Published On 2019-06-10 12:05 GMT   |   Update On 2019-06-10 12:05 GMT
போடி அருகே வேலை வாங்கித் தருவதாக பெண்ணை கற்பழித்த வாலிபர் ஆபாச வீடியோ எடுத்து நண்பர்களுக்கும் விருந்தாக்கினார்

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே வேலை வாங்கித் தருவதாக பெண்ணை கற்பழித்து நண்பர்களுக்கும் விருந்தாக்கிய வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் போடி சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மாதத்துக்கு ஒரு முறை தனது மனைவி பெயரில் பணம் அனுப்பி வந்தார்.

அந்த பணத்தை வங்கியில் சேமித்து வைப்பதற்காக சங்கராபுரத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுள்ளார். அந்த வங்கியில் பணிபுரிந்து வரும் முத்து சிவ கார்த்திகேயன் (28) என்பவர் புதிய கணக்கு தொடங்க உதவுவதாக சுமதியிடம் கூறினார். பின்னர் அவரது தனிமையை தெரிந்து கொண்டு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

பின்னர் தான் வங்கியில் வேலை வாங்கித் தருவதாக சுமதிக்கு ஆசை வார்த்தைகள் கூறி கம்பத்துக்கு அழைத்து வந்தார். அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து சுமதியை கற்பழித்தார்.

அதன் பின்சுமதியை சந்தித்த முத்து சிவகார்த்திகேயன் நம் இருவரும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்ததாக காட்டி மிரட்டியுள்ளார். அதை வைத்தே பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் காட்டினார். இதனை வைத்து அவரது நண்பர்களான அன்பு, சதீஸ், பாண்டி உள்பட பலர் சுமதியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவர்களும் தாங்கள் சுமதியுடன் இருந்த வீடியோவை பதிவு செய்து வைத்துள்ளனர்.

முத்து சிவகார்த்திகேயன் அவரது நண்பர் ஈஸ்வரன் உள்பட 5 பேர் சேர்ந்து சுமதியை தேக்கடி, உத்தமபாளையம் ஆகிய ஊர்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விபரம் சுமதியின் கணவருக்கு தெரிய வரவே அவர் அதிர்ச்சியடைந்தார். தனது வீடியோ அவர்களிடம் இருப்பதால் வெளியே சொல்ல வேண்டாம் என கணவரிடம் கதறினார்.

ஆனால் தனது மனைவியை ஏற்றுக் கொள்ள கணவர் மறுத்து விட்டார். மேலும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு செல்ல முடிவு செய்தார். தனது வாழ்க்கையை தொலைத்த சுமதி இது குறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வேலை வாங்கித் தருவதாக கூறி தனது வாழ்க்கையை சீரழித்ததுடன் முத்து சிவ கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் 12 பேர் தன் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக சுமதி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து வங்கி ஊழியர் முத்து சிவ கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரனை கைது செய்தனர். மற்ற 10 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் போடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News