செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவி-குழந்தை கழுத்தை அறுத்து கொலை

Published On 2019-06-10 11:23 GMT   |   Update On 2019-06-10 11:23 GMT
நாமக்கல் அருகே நடத்தை சந்தேகத்தில் தாய்-மகனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு லாரி டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த மாணிக்கவேலூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). லாரி டிரைவர். இவரது மனைவி கவுரி(22). இவர்களுக்கு 1 வயதில் புகழ்வின் என்ற ஆண் குழந்தை இருந்தது.

இவர்களுக்கு ஊரின் எல்லையில் தோட்டம் உள்ளது. அதில் விவசாயம் செய்து வருகின்றனர். டிரைவர் வேலைக்கு சென்று வந்த சுரேஷ் தனது தோட்டத்தையும் கவனித்து வந்தார். நேற்று மாலை தனது மனைவி, மகனுடன் தோட்டத்திற்கு சென்றார். தோட்டத்தில் இருந்து கவுரியின் அலறல் சத்தம் கேட்டது.

இதை கவனித்த பக்கத்து தோட்டத்தினர், சுரேஷின் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, கிணற்றின் அருகில் சுரேஷ், கவுரி மற்றும் புகழ்வின் ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கவுரியும், குழந்தையும் இறந்து கிடந்தனர். சுரேஷ்,  உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேசை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவுரி, புகழ்வின் ஆகியோர் உடல்களை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மனைவி, மகனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு சுரேஷ் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்தது. சுரேசும், அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வீரகுமாரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடிக்க செல்வது வழக்கம். வீரகுமாருக்கும், தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக சுரேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று மாலை சுரேஷ் தனது நண்பர் வீரகுமாரை மது குடிக்க தோட்டத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு வீரகுமார் மறுத்தார். இதனால் விரக்தியில் சுரேஷ், தனது மனைவி கவுரி மற்றும் குழந்தை புகழ்வின் ஆகியோரை தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சுரேஷ் கத்தியை எடுத்து குழந்தையையும், மனைவியையும் கழுத்தை  அறுத்து கொலை செய்தார். பின்னர் சுரேசும் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கொலைக்கு பயன் படுத்திய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். சிகிச்சை முடிந்ததும் சுரேஷை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். 

Tags:    

Similar News