செய்திகள்
கைதான கள்ளக்காதல் ஜோடி

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசிய கள்ளக்காதல் ஜோடி

Published On 2019-06-04 04:43 GMT   |   Update On 2019-06-04 04:43 GMT
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசிய கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஓசரப்பள்ளி காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த நல்லுசாமியின் மனைவி கண்ணம்மாள் (வயது 68). தனியாக வசித்து வந்த இவர் கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது மகள் ரேணுகா உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் கண்ணம்மாளை தேடி வந்த நிலையில், அவர் அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தினர்.

ஆதரவின்றி இருந்ததால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்தாரா? அல்லது நகைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் கண்ணம்மாளை கொன்று கிணற்றில் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கண்ணம்மாள் மாயமானது குறித்து, அதே பகுதியை சேர்ந்த திருமால்குமரனின் மனைவி அமுதா (42) என்பவர் தான், கண்ணம்மாளின் மகள் ரேணுகாவுக்கு முதலில் தகவல் கொடுத்துள்ளார். இதனால் போலீசார் அமுதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியுள்ளார்.

கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கண்ணம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும், அவரது கள்ளக்காதலனான அந்த பகுதியை சேர்ந்த தமிழ்மாறன் (47) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கண்ணம்மாள் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அமுதாவின் கணவரும், ஒரு மகனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள். மற்றொரு மகன் மாயமாகிவிட்டார். இதனால் தனியாக இருந்த அமுதாவுக்கும், அவருடைய கணவரின் நண்பரான தமிழ்மாறனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று அமுதாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை கண்ணம்மாள் நேரில் பார்த்துவிட்டார். இதனால் தங்களது கள்ளக்காதல் விவகாரத்தை கண்ணம்மாள் பொது மக்களிடம் தெரிவித்து விடுவாரோ? என்று பயந்த இருவரும் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 24-ந்தேதி இரவு இருவரும் கண்ணம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு தூங்கிக்கொண்டிருந்த கண்ணம்மாளின் முகத்தில் அமுதா தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்தார். கொலையை மறைக்க இருவரும் கண்ணம்மாளின் உடலை அங்கிருந்து தூக்கிச் சென்று அந்த பகுதியில் கிணற்றில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

இதனால் கண்ணம்மாள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார் என்று போலீசார் நினைத்து விடுவார்கள் என்று எண்ணி இருந்துள்ளனர். மேலும் கண்ணம்மாள் மாயமானது குறித்து அவரது மகளுக்கு அமுதா தகவலும் தெரிவித்துள்ளார். இருப்பி னும் போலீசார் விசாரணையில் இருவரும் வசமாக சிக்கிக்கொண்டனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News