செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக்கொன்ற டிரைவர்

Published On 2019-06-02 14:38 GMT   |   Update On 2019-06-02 14:38 GMT
நடத்தை சந்தேகத்தில் மனைவியை அவரது கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் செல்வவிநாயகம் (வயது38). டிரைவர். இவருடைய மனைவி பானு(வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன.

பானுவின் நடத்தையில் செல்வவிநாயகம் சந்தேகப்பட்டு வந்தார். அடிக்கடி பானு செல்போனில் பேசி வந்ததால் அவருக்கும் அவரது கணவர் செல்வவிநாயகத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டில் வைத்து மீண்டும் பானுவுக்கும் செல்வ விநாயகத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வவிநாயகம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பானுவின் கழுத்தில் வெட்டியதாக தெரிகிறது.

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பானு வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்தஅக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாய்மேடு போலீசார் பானு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பானுவின் கணவன் செல்வவிநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கொலை செய்யப்பட்ட பானுவுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். மனைவியை அவரது கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News