செய்திகள்

19.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன்?- வைகோ அறிக்கை

Published On 2019-05-29 09:09 GMT   |   Update On 2019-05-29 09:09 GMT
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன்? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கடந்த 15-ந்தேதி நான் அறிக்கை விடுத்திருந்தேன். நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூன்றாவது கூட்டம், டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைமை அலுவலகத்தில் நடந்தது.

தமிழகத்தின் சார்பாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித் துறைச் செயலாளர் பிரபாகர் அளித்த பேட்டியில், “காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் குறுவை சாகுபடி, தமிழக விவசாயிகளின் நிலை மற்றும் நீர் பற்றாக்குறை பிரச்சனைகளை தெளிவாக எடுத்துரைத்த பின்னர் காவிரியில் 9.19 டி.எம்.சி. நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் எதிர் பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம் மற்றும் குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்?.

தென்மேற்கு பருவமழை தொடங்கும்பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மே மாதம் வரையில் தமிழகத்திற்கு 19.5 டி.எம்.சி. நீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என்று காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தாதது ஏன்?

குறுவைச் சாகுபடிப் பயிர்களைக் காப்பாற்றவும், குடிநீர் தேவைக்கும் தமிழகத்தின் பங்கான 19.5 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Tags:    

Similar News