செய்திகள்

பா.ஜனதா அரசு என்னை மிரட்ட முடியாது - கார்த்தி சிதம்பரம்

Published On 2019-05-29 03:29 GMT   |   Update On 2019-05-29 03:29 GMT
என் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு எப்போதும் என்னை மிரட்ட முடியாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை:

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் நேற்று புதுக்கோட்டையில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் தி.மு.க., காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவகங்கை தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் வாங்கி உள்ள ஓட்டுகள் தான் கூட்டணி கட்சி உடைய ஓட்டு வங்கி என்று கருதக்கூடாது. ஓட்டு வங்கி மக்களின் மனநிலையை பொறுத்து மாறும், தற்போது வாங்கி உள்ள வாக்குகளை தக்க வைக்கும் வகையில் கூட்டணி கட்சியினர் செயல்பட வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளை புறக்கணிப்பு செய்து நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் இயக்கத்திற்கு இளைஞர்கள் வாக்குகளை அளித்து உள்ளனர். அந்த வாக்குகளை உதாசீனமாக எடுத்து விடக் கூடாது.



என் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு என்னை எப்போதும் மிரட்ட முடியாது. தேர்தல் பிரசாரத்தின்போது கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை அளித்ததால் வாக்குகள் பெற்றும், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவை.

அதை பெறுவதற்கு தொடர்ந்து மத்திய, மாநில அரசிடம் நான் வலியுறுத்துவேன். ராகுல்காந்திதான் என்றைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பார். ரஜினிகாந்த் கூறிய கருத்து என்ன என்று எனக்கு தெரியவில்லை. வரும் காலங்களில் நோட்டா என்ற ஒன்று இருக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News