மயிலம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5 வயது பெண் குழந்தை பலி
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சென்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன்(வயது 33) கிரேன்ஆபரேட்டர். இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு 5 வயதில் சாகித்யா என்ற பெண் குழந்தை இருந்தது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் டிராக்டர் மூலம் வீட்டுக்கு தண்ணீர் கொண்டுவர கன்னியப்பன் ஏற்பாடு செய்தார். அதனைத்தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த ஏகாம்பரம்(32) என்பவர் இன்று காலை டிராக்டர் டேங்க் மூலம் கன்னியப்பன் வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வந்தார். வீட்டின் முன்பு டிராக்டர் வந்து நின்றது. பின்பு டிரைவர் ஏகாம்பரம் டிராக்டரை பின்னால் எடுத்தார்.
அப்போது அங்கு சாகித்யா விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் மீது எதிர்பாராதவிதமாக டிராக்டர் சக்கரம் ஏறியது.
இதில் பலத்த காயம் அடைந்த சாகித்யாவை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதை கேட்டதும் கன்னியப்பன் அவரது மனைவி இலக்கியா ஆகியோர் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிராக்டர் டிரைவர் ஏகாம்பரத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.