செய்திகள்

பிரியாணி பிரச்சினையில் ஸ்ரீரங்கம் ஆட்டோ டிரைவர் கொலை - 4 வாலிபர்கள் கைது

Published On 2019-05-20 12:15 GMT   |   Update On 2019-05-20 12:15 GMT
பிரியாணி பிரச்சினையில் ஸ்ரீரங்கம் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள பிச்சாண்டவர் கோவிலை சேர்ந்தவர் அப்துல்லா (வயது35). ஆட்டோ டிரைவராக இருந்தார். நேற்று திருவானைக்காவலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அப்துல்லா சவாரி ஏற்றிச்சென்றார்.

அப்போது திருவானைக்காவல் டிரங்ரோட்டில் மண்டபத்தின் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சவாரிக்கு வந்த ஒரு பெண் 30 பொட்டலம் பிரியாணி வாங்க டோக்கன் வாங்கியுள்ளார். ஆனால் மண்டபத்திற்கு சென்று பார்த்துபோது 28 பொட்டலங்களே இருந்துள்ளது. இதனால் மீண்டும் பிரியாணி கடைக்கு சென்று அந்த பெண் பிரியாணி கடை மேனேஜரிடம் கேட்டுள்ளார்.

அப்போது கடையில் இருந்தவர்களுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே வெளியில் நின்றிருந்த ஆட்டோ டிரைவர் அப்துல்லா அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதை கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்பேத்கார் நகரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடைக்காரர்களுக்கு ஆதரவாக பேசி அப்துல்லாவிடம் தகராறு செய்துள்ளார்.

பிரியாணி பிரச்சினை பெரிதாவதை பார்த்த அந்த பெண் அங்கிருந்து பயந்து கொண்டு சென்றுவிட்டார். இதற்கிடையே நாகராஜூம், அப்துல்லாவும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனது நண்பர்கள் தயாளன் என்ற ஸ்ரீராம், முன்னா,கோகுல்நாத் என்ற பாரதி ஆகியோரை அழைத்து வந்த நாகராஜ் அப்துல்லாவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதில் அப்துல்லா மயங்கி விழுந்தார். உடனே 4 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர். அடிபட்டு கிடந்த அப்துல்லாவை அவரது நண்பர் முஸ்தபா அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது முதலில் கீழே விழுந்ததால் காயம்பட்டதாக டாக்டரிடம் கூறும்படி முஸ்தபாவிடம் அப்துல்லா கூறியுள்ளார். இதனால் டாக்டர்கள் உரிய சிகிச்சையை உடனே அளிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

ஆனால் 4 பேரும் நெஞ்சில் மிதித்ததால் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அப்துல்லா பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரியாணி கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை பார்த்தபோது அதில் நாகராஜூம் அவரது நண்பர்களும் அப்துல்லாவை அடித்து உதைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்படி நாகராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது நண்பர்களான தயாளன், முன்னா, பாரதி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

பிரியாணி பிரச்சினையில் தலையிட்டு கடைசியில் அப்பாவி ஆட்டோ டிரைவர் உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. கொலை செய்யப்பட்ட அப்துல்லாவிற்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News