ஐசிஎப் ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுமி பலி
அம்பத்தூர்:
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அஸ்வதி (11). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்துள்ளார்.
இவர் கோடை விடுமுறைக்காக சென்னை ஐ.சி.எப். ரெயில்வே காலனியில் உள்ள தனது மாமா வினோத்குமாரின் வீட்டுக்கு வந்திருந்தார்.
டிக்கெட் பரிசோதகரான வினோத்குமாரின் மகன் யஸ்வந்த் காய்ச்சல் காரணமாக பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தாய் ஜானகி அங்கு சென்று விட்டார்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமி அஸ்வதி உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்டு விளையாடி உள்ளார். அப்போது வீட்டுக்குள் கட்டப்பட்டிருந்த தொட்டில் சேலையில் சிறுமி விளையாடி உள்ளார். இதில் கழுத்து இறுக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி ஐ.சி.எப். போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ரெயில்வே காலனி குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து சிறுமியின் பெற்றோர் விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.