செய்திகள்

தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரம் தேவைப்படும் - கலெக்டர் வீரராகவராவ் தகவல்

Published On 2019-05-18 06:25 GMT   |   Update On 2019-05-18 06:25 GMT
தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரம் தேவைப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்லைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

இந்த மையத்திற்கு காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்பிரிவு, ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் என மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 5 விவி பேட் எந்திரங்கள் வேட்பாளர் பெயருடன், சின்னத்தை பதிவு செய்துள்ள எந்திரத்தில் உள்ள வாக்காளர் உறுதி சீட்டுகளையும் எண்ண திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு விவி பேட்டில் உள்ள சீட்டுகளை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் ஒரு சுற்று முடிந்த பின் அதை உறுதிப்படுத்திய பிறகே அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். இதனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரத்திற்கு கூடுதலாக அவகாசம் தேவைப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News