செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் கொலை - மனைவி கைது

Published On 2019-05-14 12:06 GMT   |   Update On 2019-05-14 12:06 GMT
திருக்கடையூரில் காதல் திருமணம் செய்த வாலிபரை கொலை செய்தது தொடர்பாக மனைவி மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள தலைச்சங்காடு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 30). இவர் அப்புராஜபுரம்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் கலைமதி(25) என்பவரை காதலித்து வந்தார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சதீஷ்குமார்-கலைமதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கலைமதி கணவருடன் கோபித்துக்கொண்டு அப்புராஜபுரம்புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சதீஷ்குமார் தனது மாமனார் வீட்டுக்கு அருகே உள்ள தனது தாய்மாமன் பன்னீர்செல்வம் என்பவருடைய வீட்டுக்கு சென்றார். அப்போது சதீஷ்குமாரை பார்த்த கலைமதி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கலைமதியின் தந்தை நாகராஜன் அங்கு வந்து தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சதீஷ் குமாரை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சதீஷ் குமாரின் தாய்மாமன் பன்னீர்செல்வம், பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரின் மாமனார் நாகராஜன்(58), சதீஷ்குமாரின் மனைவி கலைமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News