செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் அனுமதிக்க மாட்டோம் - நாராயணசாமி

Published On 2019-05-13 10:36 GMT   |   Update On 2019-05-13 10:36 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வரையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுவையில் 274 கிணறுகள் அமைக்கப்படவுள்ளது. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் கொண்டதாக இருக்கும். விழுப்புரத்தில் 139 சதுர கி.மீட்டருக்கு கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல புதுவை மாநிலத்தில் புதுவை பிராந்தியத்தில் 2 சதுர கி.மீட்டரும், காரைக்காலில் 39 சதுர கி.மீட்டருக்கும் கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுவை பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான பகுதிகள்தான் கடற்கரையை ஒட்டிய பகுதி.

இப்பகுதியில்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 2 சதுர கி.மீட்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் ஏம்பலம் மற்றும் மணவெளி ஆகிய தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளை சேர்ந்த அமைச்சர் கந்தசாமியும், அரசு கொறடா அனந்தராமனும் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக புதுவை அரசுக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை. புதுவையை பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்த காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் புதுவையில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார்.

திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டிருக்கும் தொகுதியின் அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்காது என கொள்கை முடிவு எடுத்துள்ளோம். சுற்றுச்சூழல்துறை அமைச்சராக நான்தான் உள்ளேன். பெரிய மாநிலங்களே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த கடும் எதிர்ப்பினால் தவிக்கின்றனர்.

சிறிய மாநிலமான புதுவையில் இத்திட்டங்களுக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. தேர்தலுக்கு பிறகு மத்தியில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வந்துவிடும். இதனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாது. எக்காரணத்தை கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல மணவெளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுடமான அனந்தராமனும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News