செய்திகள்
தகடுகளாக மாற்றி டி.வி. ஸ்டாண்டில் மறைத்து கடத்தி வந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ தங்கத்தை படத்தில் காணலாம்.

திருச்சிக்கு டி.வி. ஸ்டாண்டில் மறைத்து 2 கிலோ தங்கம் கடத்தல்

Published On 2019-05-06 04:19 GMT   |   Update On 2019-05-06 04:19 GMT
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு டி.வி. ஸ்டாண்டில் மறைத்து 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். #TrichyAirport
திருச்சி:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ் (வயது 34) என்பவர் கொண்டு வந்த டி.வி. ஸ்டாண்டை சோதனையிட்டனர். இதில், அவர் ரூ.66.25 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 95 கிராம் எடையுள்ள தங்கத்தை 7 தகடு வடிவில் செய்து அதனை டி.வி. ஸ்டாண்டில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், முருகேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் சிவகங்கையை சேர்ந்த சையது உசேன், சென்னையை சேர்ந்த முகமது முஸ்தபா ஆகியோர் ஆசன வாயிலில் 210 மற்றும் 211 கிராம் எடை கொண்ட 421 கிராம் எடையிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே போன்று சிங்கப்பூரில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த தீபக்குமார், தஞ்சையை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் எடை மிஷின் மற்றும் ரிஞ்ச் ஸ்பேனர்களில் தலா 449 கிராம் எடை கொண்ட 898 கிராம் தங்கத்தினை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.41.72 லட்சம்.

கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

எனவே தங்கம் கடத்தலில் பலர் குருவியாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து சோதனையை தீவிரப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். #TrichyAirport
Tags:    

Similar News