செய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் சென்னை விமான நிலையத்தில் கைது

Published On 2019-04-30 10:04 GMT   |   Update On 2019-04-30 10:04 GMT
அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகளை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

அபுதாபியில் இருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்தது.

இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்தனர். அனைவருடைய பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.

இந்த சோதனையில் அபுதாபி விமானத்தில் சென்னை திரும்பிய 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அவர்களில் ஒருவர் தஞ்சை மாவட்டம், அம்மா வட்டம், அம்மா பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (32). இவர் கொலை வழக்கு குற்றவாளி. 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்று தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து இருந்தார்.

மற்றொருவர் பெயர் சேக் முகமது (32). தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர். இவர் அடிதடி வழக்கில் தலைமறைவானவர் என்ற தகவலை போலீசார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து 2 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து தஞ்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News