செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 28 லட்சம் மோசடி தாய்-மகன் மீது வழக்கு

Published On 2019-03-16 10:29 GMT   |   Update On 2019-03-16 10:47 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 29). இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

உசிலம்பட்டி கலாம் நகரைச் சேர்ந்த சத்யசீலன் (31) மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் தேவி ஆகியோர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி தந்தனர். இதன் அடிப்படையில் நான் அவர்களிடம் ரூ.13 லட்சம் கொடுத்தேன்.

இதையடுத்து எனக்கு மத்திய அரசு நிறுவனத்தின் பணியாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித்தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்தனர்.

இதற்கிடையே நான் பணி ஆணையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரித்தேன். அப்போது அது போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. நாங்கள் அரசு வேலைக்காக கொடுத்த ரூ.28 லட்சத்தையும் சத்யசீலனும், பாண்டியம்மாள் தேவியும் திருப்பித்தர மறுத்து வருகின்றனர்.

மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் மனு மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை தனக்கன்குளம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கோட்டூர் கருப்பு என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2014-ம் ஆண்டு என் மனைவி ஜோதிக்கு தமிழக அரசின் சத்துணவு மையத்தில் வேலை தேடி வந்தேன். அப்போது எம்.கல்லுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டி (50) மற்றும் அவரது மகன்கள் சந்திரசேகரன், குட்டிக்கண்ணன் ஆகிய 3 பேரும் என்னிடம் சத்துணவு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்தேன். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி என் மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.

நான் அவர்களிடம் என் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாங்கிய ரூ.2.60 லட்சத்தை திருப்பி தர மறுத்ததுடன் எனக்கு மிரட்டலும் விடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News