செய்திகள்

கோவை அருகே விபத்து - பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

Published On 2019-01-21 04:30 GMT   |   Update On 2019-01-21 04:30 GMT
கோவை அருகே விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் மனோ. இவரது மகன் டேனியல்(வயது 15) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருடைய நண்பரான அதேபகுதியை சேர்ந்த தரணீஸ்வரன்(14) 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று இரவு இவர்கள் இருவரும் மொபட்டில் வீர கேரளத்தில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். டேனியல் மொபட்டை ஓட்ட தரணீஸ்வரன் பின்னால் அமர்ந்திருந்தார். வேடப்பட்டி- வீரகேரளம் சாலையில் உள்ள ஒரு பால் பண்ணை அருகே சென்ற போது எதிரே வந்த கார் இவர்களது மொபட் மீது வேகமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த டேனியல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய தரணீஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே அங்கு திரண்ட பொதுமக்கள் ஆவேசமடைந்து, காரை அடித்து உடைத்து தலை குப்புற கவிழ்த்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வடவள்ளி இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய காரை கோவையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News