செய்திகள்

கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியான தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் - மகள் மனு

Published On 2019-01-14 05:31 GMT   |   Update On 2019-01-14 05:31 GMT
கச்சத்தீவு அருகே கடலில் மூழ்கி பலியான தந்தையின் உடலை மீட்டுத்தரக்கோரி அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். #Fishermendeath

ராமேசுவரம்:

ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே உள்ள இலந்தைகூட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது50) என்பவரும், கருப்பையா என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்கு சென்றிருந்தார்.

நேற்று இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்ததாக கூறி 28 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. மீனவர்களும் விரட்டியடிக்கப்பட்டனர்.

அப்போது கருப்பையா படகில் இருந்த முனியசாமி எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை காப்பாற்ற கடலில் குதித்தனர். ஆனால் பலனில்லை.

இதற்கிடையில் முனியசாமியின் உடல் யாழ்பாணம் அருகே கரை ஒதுங்கியது. இந்த தகவலை இலங்கை அரசு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

இந்திய அதிகாரிகள் ராமேசுவரம் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மேலும் இலந்தை கூட்டத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகள் சண்முகப்பிரியாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இன்று காலை சண்முகப்பிரியா, அவரது கணவர் சண்முகநாதன் மற்றும் உறவினர்கள ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு உதவி இயக்குநர் யுவராஜிடம், இலங்கையில் கரை ஒதுங்கிய தனது தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தனர். #Fishermendeath

Tags:    

Similar News